அரசு முறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் சென்றார். அங்கு, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்தார். கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பிறகு, போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார். ரஷியா உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு எனது வருகை வரலாற்று சிறப்புமிக்கது. இந்திய- உக்ரைன் நட்புறவை ஆழப்படுத்தும் நோக்கத்தில் நான் இந்த சிறந்த நாட்டிற்கு வருகைத் தந்தேன். நான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தினேன். அமைதி எப்போதும் நிலவ வேண்டும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது. உக்ரைன் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.