ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் பீர் பாட்டிலால் தொழிலாளி கொலை… குழந்தைகளுடன் கதறி அழுத மனைவி… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish2 July 202409 views ஈரோடு கருப்பணசாமி கோவில் தெருவில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். டைல்ஸ் ஓட்டும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற முரளி வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சாஸ்திரி நகர் ரயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் வாலிபர் ஒருவர் கழுத்தில் வெட்டு காயங்களுடன் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற சூரம்பட்டி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடைத்தது முரளி என்பது தெரியவந்தது. மேலும் அவரது மனைவி குழந்தைகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து முரளியின் உடலை பார்த்து கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து முரளியின் கழுத்தில் ஆழமான வெட்டு காயம் இருந்த நிலையில் அவர் உடல் அருகே பீர் பாட்டில்கள் உடைந்த நிலையில் காணப்பட்டது. எனவே மது தகராறில் கொலை நடந்ததா?, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.