கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் பள்ளி விடுதியில் வைத்து கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீமதி என்ற மாணவி மர்ம மரணம் அடைந்தார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி.க்கு மற்றம் செய்யப்பட்டது.
தற்போது இந்த வழக்கில் ஸ்ரீமதி தாயார் செல்வி, கடலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோரிடம் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி சம்மந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் திராவிடமணி அவர்களை முறையாக ஆஜர் படுத்தி சிறப்பு புலனாய்வு குழு டிஎஸ்பி அம்மாதுரை தலைமையில் போலீசார் 1 மணி நேரம் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில் மாணவியின் தாயார் செல்வி விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.